அழித்தல் மற்றும் இறப்பிற்கான செயலைப் செய்பவர் இறைவன் சிவபெருமான். பிரம்மர் உயிரைப் படைப்பதும், விஷ்ணு படைக்கப்பட்ட உயிரை காக்கவும் இருக்கும்போது அந்த உயிருக்கு முக்தி அளிக்கக்கூடிய இறப்பை வழங்கும் இறைவனாக திகழ்பவர் சிவபெருமான்.
★கோபம்:
சிவனின் கோபத்தை நினைத்து பார்க்கும்போது நமக்கு தோன்றுவது அவரின் நெற்றிக்கண் என்றறியப்படும் மூன்றாவது கண். இந்த நெற்றிக்கண் பற்றிய ரகசியம் என்னவாக இருக்கும் என்று நமக்கு அறிந்து கொள்ளும் ஆவல் தானாகவே வருவதுண்டு. இந்து மதத்தின் எல்லா நூல்களும் சிவபெருமானுக்கு மூன்று கண்கள் இருப்பதாக கூறுகின்றன. ஆனால் ஒவ்வொரு கதையிலும் இந்த கண் பற்றிய ரகசியம் வெவ்வேறாக உள்ளன.
★நெற்றிக்கண் திறப்பு:
இறைவன் சிவன் இந்த உலகத்தை அழிவிலிருந்து பல முறை காப்பாற்றியுள்ளார். அவருடைய நெற்றிக்கண் திறக்கும் போதெல்லாம் அது ஒரு சிக்கலான மற்றும் அவசர நேரங்களைக் குறிப்பதாக அறியப்படுகிறது. துன்பங்களுக்கு அழிவைக் கொடுக்கும் நேரமாகவும் இருக்கிறது.
★சிவபெருமான் மற்றும் காமதேவன்:
ஒருமுறை காமதேவன் சிவனை தியானத்திலிருந்து கலைக்க முயற்சிக்கும்போது சிவபெருமான் கோபமடைந்து தன் நெற்றிக்கண்ணை திறந்தார். அவரது நெற்றிக்கண் காமதேவனை அழித்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் சிவபெருமானின் நெற்றிக்கண் நெருப்பாக உருவகப்படுத்தப்படுகிறது.
எந்த ஒரு பொருள் சார்ந்த உணர்வும் ஆன்மீக பாதையில் தொந்தரவு ஏற்படுத்தக்கூடாது என்பது இதன் மூலம் அறியப்படுவதாகும்.
★சிவபெருமானும் பார்வதி தேவியும்:
ஒரு முறை பார்வதி தேவி விளையாட்டுக்காக சிவனின் கண்களை மூடியதால் உலகம் முழுவதும் இருள் சூழ்ந்ததாக ஒரு கதை உண்டு. சிவபெருமானின் இரண்டு கண்கள் சூரியன் மற்றும் சந்திரன் என்று கூறப்படுகிறது. ஆகவே பார்வதி தேவி சிவபெருமானின் கண்களை மூடியவுடன் இந்த பிரபஞ்சமே இருளில் மூழ்கியது. ஆகவே பிரபஞ்சத்திற்கு ஒளியை கொடுக்க சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணை திறந்ததாக கூறப்படுகிறது.
★யோகிகளின் வழிகாட்டி:
சிவனின் நெற்றிக்கண் ஞான ஒளி மற்றும் விழிப்புணர்வைக் குறிக்கும்.எல்லாவற்றையும் அறிந்த யோகியாக சிவபெருமான் அறியப்படுகிறார். அவருக்கு பின்னால் வந்த யோகிகள் மற்றும் துறவிகளுக்கு அவர் ஒரு உத்வேகத்தைக் கொடுக்கிறார்.

No comments:
Post a Comment